தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
புழுங்கலரிசி - 25 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்
தேங்காய் - ஒன்றரை மூடி
வற்றல் மிளகாய் - 12
மல்லிவிதை - 4 ஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 12 பல்
இஞ்சி - 1 துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஸ்பூன்
செய்முறை :

* பருப்பு இரண்டையும் புழுங்கலரிசியுடன் சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
* பருப்பு ஊறிய பிறகு ஒன்றிரண்டாக, கரகரவென்று அரைத்துக் கொள்ளவும்.
* இதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் தேங்காய் ஒரு மூடி துருவிச் சேர்க்கவும்.
* சோம்பையும், மிளகாய் வற்றல் நான்கையும் அரைத்து பருப்போடு போடவும்.
* 200 கிராம் வெங்காயத்தையும் இஞ்சியையும் எட்டு பூண்டு பல்லையும் பொடியாக அரிந்து அதில் சேர்க்கவும். உப்பு 1 ஸ்பூன், கறிவேப்பிலை ஒரு ஸ்பூன் போட்டு பருப்பைக் கையால் நன்றாகக் கிளறி பிசையவும்.
* பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் (பெரிய எலுமிச்சை அளவு) உருட்டவும்.
* இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் உருண்டைகளை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். (இதை அப்படியே சாப்பிடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதே பருப்புக் கலவையை சிறு சிறு வடையாக தோசைக் கல்லில் தட்டியும் கொடுக்கலாம். சுவையாக இருக்கும்.)
* அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயம் தாளித்து, மீதி அரிந்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு இவற்றை வதக்கி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* புளியைக் கரைத்து மஞ்சள் பொடி சேர்த்து அதில் ஊற்றவும்.
* அரை மூடி தேங்காய்த் துருவலுடன் மிளகாய் ஆறு, மல்லிவிதை இவற்றை அரைத்து கொதிக்கும் புளித்தண்ணீரில் ஊற்றவும். குழம்பு நன்றாகக் கொதித்தவுடன் உருண்டைகளை மெதுவாக ஒவ்வொன்றாகக் குழம்பில் போட்டு ஐந்து நிமிடம் கொதித்த பின் இறக்கி வைக்கவும்.
குறிப்பு : பருப்பு உருண்டைகளை வேகவைத்துக் குழம்பில் சேர்ப்பதால் உடையாமல் இருக்கும். குழம்பு உருண்டைகளை விரும்பாத குழந்தைகளுக்கு வேக வைத்த உருண்டைகளைக் கொடுக்கலாம்.




0 comments:
Post a Comment